×

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் நெருக்கடி; மக்களவையில் மார்ச் 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் கொடுத்த புகாரால் பரபரப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது.
முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் பேச காங்கிரஸ் தலைவரான எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் கடந்த 2ம் தேதி முதல் மக்களவையில் கடும் அமளி நிலவி வந்தது. இதற்கிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளிக்க இருந்த நிலையில், சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கை அருகே வந்து தேவையற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறி பிரதமரை சபாநாயகர் ஓம் பிர்லா அவைக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதனால் கடந்த 5ம் தேதி பிரதமரின் உரை இல்லாமலேயே நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் தற்போது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை சபாநாயகர் இருக்கையில் அமரப் போவதில்லை என ஓம் பிர்லா முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து வரும் மார்ச் 9ம் தேதி விவாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 96ன் படி, தமக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீது சபாநாயகர் ஓம் பிர்லா வாக்களிக்க முடியும் என்றாலும், வாக்குகள் சமமாக இருக்கும் பட்சத்தில் அவர் வாக்களிக்க முடியாது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறுகையில், ‘சபாநாயகர் ஓம்பிர்லா, காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்’ என தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் 118 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர். சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க, மக்களவையின் அனைத்து உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தேவை. வெறும் அவைக்கு வந்திருப்பவர்களின் பெரும்பான்மை மட்டும் போதாது. தற்போதைய சூழலில் ஒன்றியத்தில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்களவையில் தெளிவான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

எனவே, தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், எதிர்க்கட்சிகளிடம் போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இவ்விவகாரத்தில் இந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று எதிர்கட்சிகளுக்கு தெரிந்தும், சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்த தங்கள் அதிருப்தியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யவும், விவாதத்தின் மூலம் தங்கள் புகார்களை முன்வைக்கவும் எதிர்க்கட்சிகள் இதனை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன.

Tags : Speaker ,Om Birla ,Lok Sabha ,New Delhi ,Former Army ,Naravane ,India ,
× RELATED இந்தியாவின் ஜவுளித்துறையை வங்கதேசம்...