×

இம்மாதம் இறுதியில் தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றி பார்க்க வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோரிக்கை

சென்னை: பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர இருக்கிறார். தமிழகம் வரும் பிரதமர், அறுபடை வீடுகளையும் சுற்றிப்பார்த்து அங்கு நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி, ஜமாலியா, புளியந்தோப்பு, பட்டாளம் ஆகிய நான்கு இடங்களில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகங்களின் முன்னேற்ற பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி இம்மாத இறுதியில் மீண்டும் தமிழகம் வருகிறாராம். வரட்டும். தமிழகத்தில் இருக்கக்கூடிய கடவுளை வழிபட வேண்டும் என எண்ணம் தோன்றி உள்ளது. தமிழகத்தில் இருக்கும் முருகன் அவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். தேர்தலில் வேல் எடுத்து பார்த்தார்கள். திருப்பரங்குன்றத்தை கையில் எடுக்க பார்த்தார்கள். முருகர் பக்தர்கள் மாநாடு நடத்தினர்.

ஆனால், தமிழ் கடவுள் முருகன் எங்கள் முதல்வரோடு தான் கைகோர்த்து நின்றுள்ளார். எனவே வருகின்ற பிரதமருக்கு வைக்கின்ற ஒரு வேண்டுகோள். அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்த்து அதிலும் குறிப்பாக பழனியை சென்று பார்த்து அங்கு நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் குடமுழுக்கு முடிந்த திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கும் சென்று சுற்றி பார்க்க வேண்டும். அங்கு நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கட்டும்,

அறுபடை வீடுகளுக்கும் சென்று வர பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன். திருச்செந்தூர் வருபவர்களுக்கு அறுபடை வீடுகளையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதற்கு ஏதுவாக அறுபடை முருகனையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். 80 சதவீத பணிகள் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணிகள் மட்டும் தான் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும். மற்ற பணிகள் அனைத்தும் இந்த மாதத்தில் நிறைவடைந்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,Minister ,P.K. Sekarbabu ,Chennai ,Modi ,Minister of ,Hindu ,Religious and Endowments ,Chennai… ,
× RELATED இனி வரும் காலங்களில் விளையாட்டு...