×

வனவாசம் சென்றவரா? வனத்துறை அமைச்சரா?

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெ.ஜி.பிரின்ஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2011, 2016, 2021) வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். குளச்சல் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கு கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்த போதிலும், சமீபத்திய தேர்தல்களில் பாஜக – காங்கிரஸ் இடையிலான நேரடிப் போட்டியாக மாறியுள்ளது.

2021 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தனது கூட்டணியில் இத்தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக இங்கு தனித்துப் போட்டியிட வில்லை. 2024 மக்களவைத் தேர்தலின் போது, இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக சுமார் 3% வாக்குகளை மட்டுமே பெற்றது. அதிமுக இந்த தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.

2001ல் அதிமுக வேட்பாளர் கே.டி.பச்சைமால் 46.23% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1984ல் அதிமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினம் (தற்போது திமுக) வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் லாரன்ஸ் காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 11,821 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். குளச்சல் ஒரு கடலோரத் தொகுதி என்பதால் இங்கு மீனவ சமூகத்தினரின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.

அதிமுகவிற்கு ஒரு நிலையான வாக்கு வங்கி இங்கு இருந்தபோதிலும், கூட்டணி அரசியல் காரணமாக கடந்த இரண்டு தேர்தல்களில் களம் காணாதது அக்கட்சியின் நேரடி செல்வாக்கை இத்தொகுதியில் குறைத்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குளச்சல் தொகுதியில் மீண்டும் நேரடியாகக் களம் காண அதிமுக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குளச்சல் தொகுதியில் முன்னாள் எம்.பி.யும், கல்வியாளருமான நாஞ்சில் எம். வின்சென்டை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருபவர் நாஞ்சில் எம்.வின்சென்ட். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சராகவும், 1986 முதல் 1992 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2025 செப்டம்பரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே 40 ஆண்டுகள் கட்சி பணியாற்றாமல் வனவாசம் சென்றவருக்கா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்று அதிமுக முகாமில் கேள்விகள் எழுந்துள்ளது. இவை ஒருபுறம் இருக்க முன்னாள் அமைச்சர் பச்சைமால், குளச்சலில் போட்டியிட மீண்டும் சீட் கேட்டுள்ளார். அவர் அதிமுகவின் அறிவிக்கப்படாத வேட்பாளராகவே தற்போது களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

பூத் கமிட்டி கூட்டங்கள், கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழா என தொகுதி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிமுகவில் இருந்து டி.டி.வி. பிரிந்த போது அமமுகவில் பச்சைமால் இருந்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தற்போது கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பிலும் உள்ளார். எடப்பாடியின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் பச்சைமாலுக்கும் இடம் உண்டு.

* ஜேபிஆர் மகளும் போட்டி
தவெக சார்பில் குளச்சலில் போட்டியிட எம்.ஜி.ஆரால் வளர்ச்சி அடைந்த மறைந்த பிரபல கல்வி தந்தையும் பிரபல தொழில் அதிபரான ஜேபிஆரின் மகள், தான்தான் தவெக வேட்பாளர் என அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். தவெக நிர்வாகிகளும், தலைவர் விஜயின் குடும்ப உறவாக கல்வி தந்தையின் மகள் திகழ்கிறார். கல்வி தந்தை இல்ல திருமணத்திற்கு தாய்மாமா நிலையில் விஜய் கலந்து கொண்டார்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் அளிக்கும் பொறுப்பும், கல்வி தந்தையின் குடும்ப உறுப்பினரே ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, அவர் வேட்பளராக விரும்பினால் தலைவர், தலையாட்டி விடுவார் என்கின்றனர். ஆனால் கல்வி தந்தை உயிரோடு இருந்த போது, முட்டத்தை சேர்ந்தவரை அதிமுக சார்பில் போட்டியிட வைத்து வெற்றி பெற முயன்று தோற்றதும், அதனால், கல்வி தந்தை, ஊரில் அவர் கட்டி தந்த மண்டபத்தில், தனது ஆதரவாளர்களை சந்திக்க மறுத்து கோப முகம் காட்டினார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

 

Tags : Minister ,J ,Congress Party ,Kulachal Assembly Constituency ,Kanyakumari district ,G. Prince ,Supreme Leader ,
× RELATED எம்எல்ஏவானது அதிமுகவுல… பெயர்...