×

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை; வரும் 8ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது

 

புதுச்சேரி: ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (06/02/2026) துளசி கிராண்ட் ஹாலில் நடைபெற்றது. இதில் கேப்டன். பிரதாபன், பாக்கியசாலி, வெங்கடாசலம் மற்றும் வேதநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆதியோகி ரத யாத்திரை

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

ஆதீனங்களின் அருளாசியோடு…

தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.

பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக!

இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில்…

வடக்கு மண்டலத்தை பொறுத்த வரையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் துவங்கிய ரத யாத்திரை சென்னை, கிருஷ்ணகிரி, ஒசூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம் வழியாக பயணித்து 8-ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளது.

புதுச்சேரியில் 8-ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் கருவாடிக் குப்பம் சித்தானந்த கோயிலில் ஆதியோகி ரத யாத்திரையை, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் K.லட்சுமிநாராயணன் அவர்கள் ரத யாத்திரையைத் தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் லாஸ்பேட்டை, ஏர்போர்ட் ரோடு, முத்தியால்பேட்டை, எம்.ஜி ரோடு, அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர், அண்ணா சதுக்கம்,புதிய பேருந்து நிலையம், நெல்லித்தோப்பு, முதலியார் பேட்டை, ரெட்டியார்பாளையம் வழியாகப் பயணிக்க உள்ளது.

திங்கள்கிழமை (பிப்ரவரி 9) ECR சங்கரா வித்யாலயா பள்ளியில் இருந்து தொடங்கும் ரத யாத்திரை
விவேகானந்தா பள்ளி, தட்டாஞ்சாவடி, திலாஸ்பேட்டை, மூலக்குளம், வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயணித்து பத்துக்கண்ணு வழியாக திருக்கனூர் சென்றடைகிறது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி.10) போன் நேரு பள்ளியில் இருந்து ரத யாத்திரையை, புதுச்சேரி உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. A. நமச்சிவாயம் அவர்கள் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, திருக்கனூர் பஜார் வீதி, திருமங்கலம் கோவில், குமாரபாளையம் வழியாக யாத்திரை விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு செல்கிறது.

புதுச்சேரியில் மஹாசிவராத்திரி விழா

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா புதுச்சேரி லாஸ்பேட்டை இ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

ஆதியோகி ரதம்

ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணத்து வருகின்றன.

ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பமுள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

சிவ யாத்திரை

இதனுடன், ‘சிவ யாத்திரை’ எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

 

Tags : Adiyogi Rath Yatra ,Puducherry ,Isha Mahashivaratri ,Tamil Nadu ,Thenkailaya Bhakti Peravai ,
× RELATED சென்னை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு!