- ஜனாதிபதி
- கெம்சந்த் சிங்
- முதல் அமைச்சர்
- மணிப்பூர்
- பெண் துணை முதலமைச்சர்
- இம்பால்
- மெய்தி
- குக்கி
- பீரன் சிங்
- பாஜக
இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மெய்தி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்டது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்ததால் கடந்த 2025 பிப்ரவரியில் பாஜவை சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து மணிப்பூர் சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வர இருந்த நிலையில் திடீரென டெல்லியில் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் புதிய முதல்வராக யும்னம் கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
துணை முதல்வர்களாக நெம்சா கிப்ஜென்னும், எல். டிகோவும் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று காலை மணிப்பூர் வந்த கேம்சந்த் சிங், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் அஜய்பல்லாவை சந்தித்து புதிதாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் பா.ஜ மூத்த தலைவர்களும் சென்று இருந்தனர். இதை தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு பரிந்துரையை ஏற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க வரும்படி கேம்சந்த்சிங்கிற்கு கவர்னர் அஜய்பல்லா அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று நேற்று மாலை 6 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மணிப்பூர் புதிய முதல்வராக கேம்சந்த்சிங் பதவி ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து துணை முதல்வர்களாக நெம்சா கிப்கென்னும், எல். டிகோவும் பதவி ஏற்றனர். பாஜவின் கோவிந்தாஸ் கோந்தோஜம் மற்றும் என்.பி.பி.யின் கே.லோகென் சிங் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் கோவிந்தாஸ் கோந்தோஜமுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் துணை முதல்வர் நெம்சா கிப்கென் டெல்லியில் உள்ள மணிப்பூர் பவனில் இருந்து காணொலி மூலம் பதவி ஏற்றார்.
* புதிய முதல்வர் யும்னம் கேம்சந்த் சிங், மெய்தி இனத்தை சேர்ந்தவர்.
* குகி சமூகத்தைச் சேர்ந்த பாஜ எம்எல்ஏ நெம்சா கிப்கென் துணை முதல்வர்.
* இன்னொரு துணை முதல்வர் எல்.டிகோ, நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்தவர். இவர் நாகா பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
