சென்னை: அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் கடந்த மாதம் 22ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதிவாய்ந்த முதுநிலை பட்டதாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறையின் EMIS இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் பணி நியமன கவுன்சலிங் நடத்தப்பட உள்ளது.
கவுன்சலிங் நடக்கும் நாளில் தெரிவு செய்யப்பட்ட நபர்களில் கல்வித் தகுதி சான்றுகள் தவிர, சாதி சான்று, மாற்றுத் திறன் கொண்டதற்கான சான்று உள்ளிட்டவற்றை முறையாக சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சலிங் நடத்துவதற்கான தேதி குறித்த விவரங்கள் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
