திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று, ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மாநில அரசு கவனம் செலுத்திய துறைகளில் இன்னும் தீவிரமாக செயல்பட உதவும். வணிகம் செய்வதற்கான எளிதான முயற்சியை செயல்படுத்த இந்த பட்ஜெட் உதவும். பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க இந்த பட்ஜெட் உள்ளது. 2047ம் ஆண்டு விகாசித் பாரதம் வளர்ந்த பொருளாதாரமாக மாறுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
ஏ.ஐ. உட்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் அடுத்தக்கட்ட சீர்திருத்தங்களுக்கு செல்லும். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்ப இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும், வாழ்க்கை எளிமையாக்குவதற்கும் பங்களிக்கும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேங்காய், முந்திரி, கோகோ மற்றும் சந்தனம் போன்ற பயிர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளன. 2047 வரை டேட்டா மையங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா டேட்டா மையங்களின் மையமாக மாறும். ஆந்திர மாநிலம் தளவாடத் துறைக்கு முழு கவனம் செலுத்தியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக, தளவாடத் துறையின் வளர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
