தைப்பூசம் : 1-2-2026
உலகில் இரக்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மக்களுக்கும் உரியது; உலகியலுக்கும் அடிப்படையாக விளங்குவது எல்லா உயிர்களிலும் இயற்கை விளக்கமாய்த் திகழ்வது தன்னை மேற்கொண்ட வரை இயல்பாக தன்வயப்படுத்தி எல்லா சித்தி களையும் வழங்குவது. கொள்கைகளில் மாறுபடும் தத்துவஞானிகளும் “உயிர்இரக்கம்” என்னும் இனிய எளிய தத்துவத்தில் ஒன்றுபடுகின்றனர்.உலக அருளாளர்கள் அனைவரும் உயிர் இரக்கமே வலிமை மிக்க ஆற்றல் என்னும் சிறந்த முடிவினை அறிவிக்கின்றனர். மேலும் உயிர்இரக்கம் பன்னெடுங்காலமாக நம் தமிழகத்தில் வழங்கி வரும் இயற்கைத் தொன்மை நெறியாகும்.உயிர் இரக்கம் என்னும் ஒளி எங்கும் பரவ அதற்கென்றே திருஅருட்பிரகாச வள்ளலார் ஆகிய நம் இராமலிங்க பெருமான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆணைக்கு இணங்க வருவிக்கவுற்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்தார்கள். அவர்கள் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூரில் இராமையாபிள்ளை சின்னம்மையாருக்கும் 5.10.1823. (சுபானு புரட்டாசி 21) ஞாயிற்றுக்கிழமை அன்று இராமலிங்க பெருமான் ஐந்தாவது மகவாக அவதரித்தார்கள்.சிறுவயது முதல் சாதாரண குழந்தை போல் அல்லாமல் இறை உணர்வுடன் சாந்த சொரூபத்துடன் காணப்பட்டார். அருட் குழந்தையாகிய இராமலிங்க பெருமானுடன் சிதம்பரம் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் திரையை தூக்கிய பொழுது எல்லாம் வெளியாகத் காணப்பெறும் கடவுள் காட்சியை பெருமான் பெற்றார்கள்.
சென்னை வாழ்வு
தந்தையின் மறைவுக்குப் பின் குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. மூத்த அண்ணன் புராண விரிவுரை செய்து குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.இராமலிங்க பெருமான் அன்னை, அண்ணன் முதலான அனைவர் மனமும் மகிழுமாறு வளர்ந்து குமாரப் பருவம் எய்தினார்கள். குடும்பத்தில் யாருக்கும் எவ்விதத் துன்பமும் சலிப்பும் இல்லாத வளர்ந்துவந்தார்கள்
திருவருட்பா பாடுதல்
நம் பெருமான் உயிர் இரக்கமும் கடவுள் பக்தியும் பொங்கித் ததும்பும் செந்தமிழ் பாடல்கள் பலவற்றை தம் ஐந்தாவது வயதிலேயே இயற்றி பாடத் தொடங்கினார்கள். அவர்கள் சென்னை கந்தகோட்டம், திருத்தணிகை, திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவலிதாயம், திருத்தில்லை முதலான அனைத்து தலங்களையும் வழிபட்டு தலங்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களை தலைவராகிய கடவுளாகவே கண்டு அனுபவித்து பொழிந்த பாடல்கள் யாவும் கல் நெஞ்சத்தையும் கரைப்பனவாகும்.
திருமணம்
பெரியோர்களின் வற்புறுத்தலாலும் உயிர் இரக்கத்தாலும் பெருமான் தமது தமக்கை மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார்கள். தமது துணைவியார் அருள்நெறியில் பழகி வருமாறு செய்தார்கள். சில ஆண்டுகளுக்குப்பின் அவர்களை தம் சுற்றத்தாருடன் சென்னையில் இருக்குமாறு பணித்தார் மற்றும் அன்பர்களுடன் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் பலவற்றையும் வழிபட்டார்கள். சொற்பொழிவுகள் செய்து உயிர் இரக்கத்தையும் கடவுள் பக்தியையும் மக்கள் உள்ளத்தில் மலரச் செய்தார்கள்.புலால் உண்ணும் வழக்கத்தை கைவிடுமாறு வலியுறுத்தி பேசினார்கள். இவ்வாறு பல இடங்களிலும் புனித பயணம் செய்தபின் கடலூரை அடுத்த கருங்குழி என்னும் ஊரில் வேங்கட ரெட்டியார் என்னும் அன்பர் இல்லத்தில் தங்கி இருந்தார்கள்.
ஜீவகாருண்யத் திருநெறி
வள்ளல் பெருமான் செடிகொடி முதலான அனைத்து உயிர்களிடத்தும் சகோதர ஒருமையும் உரிமையும் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். உயிர்களுக்கு பசி, கொலை, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம் முதலியவற்றால் உண்டாகும் துன்பங்களை நீக்கி அதனால் உண்டாகும் கடவுள் விளக்கத்தையும் கடவுள் இன்பத்தையும் பெறுவதில் ஒரு முழுமையை அடைந்தார்கள். அப்போது அவர்கள் உடம்பு இயற்கை உடம்பாக ,அருள் உடம்பாக, ஒளி உடம்பாக வேதிக்கப்பட்டது. அவர்கள் நடந்தால் அடிச்சுவடு உண்டாவதில்லை. சூரியஒளி முதலியவற்றால் அவர்களுக்கு நிழல் உண்டாவதில்லை. அவர்களை ஒளிப்படம் (photo) எடுக்க பலமுறை பலர் முயன்றும் அவர்கள் அணிந்திருந்த வெண்ணிற ஆடைகள் மட்டுமே ஒளிப்பட தகட்டில் பதிவாயின. அவர்கள் உடம்பில் அழுக்கு, வியர்வை, நரை, திரை, பிணி, மூப்பு,இறப்பு முதலியன இல்லை. உணவு ,உறக்கம் முதலியன சிறிதும் தேவை இல்லாத நிலையில் அவர்கள் உடம்பு விளங்கியது. அவரது திருமேனி ஒரு சமயம் தோன்றும் ஒரு சமயம் தோன்றாது இவ்வாறு அவர்கள் பால் விளங்கிய ஒளிவண்ணச் சிறப்புகளைக் கண்ட சான்றோர்களும், அறிஞர்களும், பக்தர்களும், யோகிகளும், பெரியோர்களும் அன்பும் வியப்பும் ஒருங்கே அடைந்து அவர்களை அடுத்து வாழத் தொடங்கினார்கள்.
சன்மார்க்க சங்கம் அமைத்தல்
வள்ளல் பெருமான் உயிர்இரக்க நெறி உலகெங்கும் பரவ தமது அன்பர்கள் அனைவரையும் சேர்த்து சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். புலால் மறுத்த அனைவரையும் சாதி, சமய, மத, இன ,ஆண், பெண் வேறுபாடு இன்றி சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.உயிர் இரக்கமே வடிவான கடவுளை உயிர் இரக்கமே வடிவாய் வழிபட வேண்டும் அப்பொழுது அருள்விளக்கம் உண்டாகும், அருள் விளக்கத்தால் எல்லா வகை உடல் நோய்களும் மனநோய்களும் மாறும்; ஊழ்வினை துன்பம் நீங்கும்; கல்வி செல்வம், தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு முதலான இவ்வுலக இன்பங்கள் தடையில்லாமல் உண்டாகும் அருள் விளக்கம் நிறைவு பெறும் பொழுது உடம்பின் அணுக்கள் அருள் ஒளியால் மாற்றமடைந்து நரை, திரை, பிணி, மூப்பு, இறப்பு முதலியன இல்லாத ஒளி உடம்பு வாய்க்கும். ஒளி உடம்புடன் எல்லா உயிர்களிலும் கலந்து கொண்டு கடவுளைப் போல பேரின்பத்தோடு மரணம் இல்லாமல் வாழலாம். இதுவே கடவுள் கற்பித்த சமரச சுத்த சன்மார்க்க நெறி -ஒளி நெறி பெருநெறி -எல்லா சமயங்களுக்கும்- எல்லா மதங்களுக்கும்- எல்லா காலங்களுக்கும்- எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான இயற்கை திருநெறி’ என்று சன்மார்க்கத்தை வள்ளல் பெருமான் வரையறுத்து உபதேசித்தார்கள்.
திருஅருட்பா வெளியீடு
வள்ளல் பெருமானுடைய நன் மாணவர்கள் பலருள் தலைசிறந்தவர் தொழுவூர் வேலாயுதனார் அவர்கள். பலர் வள்ளல்பெருமான் பாடிய இனிய எளிய அருட்பாக்கள் அனைத்தையும் வள்ளல் பெருமான் கருத்தை உணர்ந்து தொகுத்து ஆறு திருமுறைகளாக வகுத்தார்கள். அவற்றுள் திருஅருட்பா முதல் நான்கு திருமுறைகள் சன்மார்க்க சங்கம் சார்பில் 1867ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஐந்தாவது, ஆறாவது திருமுறைகள் பிறகு வெளியிடப்பட்டன.
அருள் நிலையங்கள்
உயிர்இரக்க திருநெறியை விளக்குவதற்கு வள்ளல்பெருமான் சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சித்திவளாகம் என்னும் மூன்று அருள் நிலையங்களை ஏற்படுத்தினார்கள். இவற்றுள் சத்திய தருமசாலை பசி நீக்குதல் என்னும் பேர் அறத்தை நடைமுறைப்படுத்திக் காட்டுவது. சத்தியஞானசபை எல்லா உயிருக்கும், உயிருக்கு உயிராக பெரும் தயவே வடிவாகி கடவுள் விளங்குகிறார் என்னும் இயற்கை உண்மையை விளக்குவது. சித்திவளாகம், உயிர்இரக்கத்தின் முடிவான சித்திநிலை. கடவுளைப்போல எல்லாம் செய்யவல்ல திறன் எல்லாம் அறியும் முழு உணர்வு முதலியன விளங்க எல்லா உயிர்களிலும் கலந்து மரணமில்லாமல் வாழுதல் என்பதை அறிவிப்பது.
சத்திய தருமசாலை
வள்ளல் பெருமான் வடலூரில் 1867 ஆம் ஆண்டு வைகாசி திங்கள் 11 ம் நாள் சத்திய தருமச்சாலையை துவக்கினார்கள். வளர் ஒளிவிளக்கு (அகண்ட தீபம்) அமைத்து கடவுளை ஒளி வடிவில் வழிபடும் நெறியை கற்பித்தார்கள். பிறகு தாம் வரைந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பொது வேதத்தை உயிர்இரக்கப் பயிற்சி செய்யும் முறையை விரிவாக உபதேசித்து அருள் செய்து அன்றைய தினம் முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பேருக்கு உணவளித்தார்கள். அன்று தொடங்கி அற்றார் அழிபசி தீர்த்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன் காரணமாக 1867ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 11 ம் நாள் வள்ளல் பெருமான் இயற்றிய அடுப்பு அணையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்று வரையும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது.1870 வரை பெருமான் சத்திய தருமசாலை தங்கியிருந்தார்கள்.
சத்திய ஞானசபை
மக்களின் வயிற்றுப்பசியை தனித்த வடலூர் வள்ளலார் மக்களின் அறியாமையை நீக்கி அறிவுப்பசியைத் தூண்டிவிட வேண்டும் என்று விரும்பி தனது சமரச சன்மார்க்க வேதம் பரவுமாறும் உயிர் இரக்கத்தின் உயர்நிலை அனுபவங்களை வடலூர் என்ற புனித பூமி அறிவை விளக்குவதால் வடலூரை பெருமான் உத்தர ஞான சிதம்பரம், உத்தர ஞான சித்திபுரம் என்று அழைத்தார்கள். உத்தர ஞான சிதம்பரம் ஆகிய வடலூரில் சத்திய ஞானசபை என்னும் அற்புதமான தெய்வ நிலையத்தை பார்வதிபுர அன்பர்கள் கொடுத்த மனைப் பரப்பில் அனைவரும் சமரசமாக கலந்து வழிபாடு செய்யத்தக்க அமைப்புடன் சத்திய ஞான சபையை தாமரை வடிவில் எண்கோணமாக அழகுற அமைத்து 25.1.1872 பிரஜாபதி தைத் திங்கள் 13-ஆம் நாள், வியாழக் கிழமை, பூச நாள் அன்று முதன் முதலாக சபையில் வழிபாடு தொடங்கப் பெற்றது. அனைவரும் அருட்பெரும் ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர்.
அதில் ஏழு திரைகள் விடப்பட்டுள்ளன. அருட்பெரும் ஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வெவ்வேறு ஏழு திரைகளும் தத்துவ படங்கள் நம்மிடமுள்ள ஞானம் ஆகிய ஏழு திரைகள் நீங்க பெற்றால் அருட்பெரும் ஜோதியை தரிசிக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது. வள்ளலார் தமது அருட்பெருஞ்ஜோதி அகவலில் இத்தத்துவத்தை எடுத்து கூறியுள்ளார்.பூச நன்னாளில் கருந்திரை, நீலத் திரை, பச்சைத் திரை, செம்மைத் திரை, பொன்மை திரை, வெண்மைத் திரை, கலப்பு திரை என்ற ஏழு திரைகளை தைப்பூச நன்னாளில் நீக்கி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆகிய இறைவனை… அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை!! அருட்பெருஞ்ஜோதி!!! என்ற மகா மந்திரத்தை உச்சரிக்கச் செய்து அருட்பெருஞ்ஜோதியை ஜோதி வடிவில் தரிசனம் செய்தார்கள். செய்வித்தார்கள்.
சித்திவளாகம்
வள்ளல் பெருமான் 1870 ஆம் ஆண்டு முதல் கடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் ஒரு குடிலில் தங்கி இருந்தார்கள் சித்திவளாகம்(உயிர் இரக்கத்தால் உண்டாகும் அருள் சித்திகளை வழங்கும் இடம்)என்று பெயரிட்டார்கள்.
1873 ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் 7 ஆம் நாள் மேற்புறமும் கீழ்புறமும் உடைய சன்மார்க்கக் கொடி கட்டி ஒரு சொற்பொழிவு செய்தார்கள். அப்போது என்னை ஏறா நிலைமிசை ஏற்றியது யாதெனில் தயவு தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது என்று கூறி உயிர் இரக்கமே தம்மை கடவுள் நிலைக்கு உயர்த்தியது என்று அறிவித்தார்கள்.அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை!! அருட்பெருஞ்ஜோதி!!!என்னும் அருள் மந்திரத்தை வெளிப்படையாக உபதேசித்தார்கள் பெரும் தயவு மயமான பேரழிவை கடவுள் இதுவே பேரின்பம் என்று மந்திரத்தின் பொருளையும் விளக்கி உரைத்தார்கள்.
அருட்பெரும் சித்தி
திருஅருட்பிரகாச வள்ளலார் சித்தி வளாகத்தில் வழிபாட்டுக்காக ஒரு திருவிளக்கை கொண்டிருந்தார்கள் அதனை ஸ்ரீமுக ஆண்டு 1873 கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் சித்தி வளாகத்தின் வாயிலில் வைத்து இதைத் தடைபடாது ஆராதியுங்கள் கடவுள் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்து உண்மை அன்புடன் வழிபடுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று தமது அருட்பேர் ஒளி நிலையை அறிவித்தார்கள்.
பெருமானின் அறிவுரை
திருஅருட்பிரகாச வள்ளலார் ஆகிய நம் இராமலிங்க பெருமான் சன்மார்க்க சங்கத்தார் பெரும் தயவோடு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் உயிர்இரக்கம், ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை, இதற்கு சாதி சமய மத உலகியல் ஆசாரங்களிலும் பெரும் வெறுப்பு விருப்புகளே முக்கிய தடைகள் இவைகளை அறவே கைவிட்டு உயிர் இரக்கத்தையே முக்கிய லட்சியமாகக் கொள்ள வேண்டும்.காலம் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல பார்க்கின்ற பாவனையை வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திருக்காப்பிட்டுக் கொள்ளுதல்
வள்ளல் பெருமான் தம் அருள் உடம்பை மக்களின் புறக்கண்களுக்குத் தோன்றாமல் மறைத்துக்கொண்டு உயிர்களுக்கு உதவி செய்வதே சிறந்தது என்று முடிவு செய்தார்கள் அதனால் 1874ஆம் ஆண்டு தைப்பூச நாளில் இரவு 12 மணிக்கு சித்தி வளாகத்தில் அமர்ந்து கொண்டு நான் உள்ளே இருக்கப்போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ஒருகால் கதவைத் திறந்து பார்த்தால் வெறும் வீடாக இருக்கும் படி ஆண்டவர் அருள் செய்வார் என்னை காட்டி கொடுக்க மாட்டார் என்று கூறி கதவுகளை திருகாப்பிட்டுக் கொண்டார்கள். சில நாட்களுக்குப் பின் அவர்கள் வள்ளலாரின்ஆணையை மீறி சில அரசு அதிகாரிகள் கதவை திறந்து பார்த்த பொழுது வெறும் வெளியாக அறை காட்சி தந்தது
நம்பெருமான் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று உலகின் கண்களுக்கு பெரும்பாலும் தோற்றப் படாமல் சித்தி வளாகத்தில் இருந்த வண்ணம் திருவருட் செங்கோல் செலுத்துகின்றார்கள். அரசியல், அறிவியல், அருளியல் முதலிய அனைத்துத் துறையிலும் உள்ள தன்னலமற்ற தலைவர்கள் அனைவரையும் கருவியாகக் கொண்டு நமது வள்ளற் பெருமான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தை சன்மார்க்க உலகமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். உயிர்க்கொலையும் புலைபுசிப்பும்நீக்கி உயிர்இரக்கத் திரு நெறியில் பழகுவோர் பெருமானை வழிபடுங்கால் ஒரு சமயம் ஒளி உடம்புடன் தோன்றி உதவிகள் செய்தும் ஒரு சமயம் ஜோதி வடிவில் தோன்றி மகிழ்வித்தும் எப்போதும் வான் வடிவமாக இருந்து அறிவை விளக்கி வருகிறார்கள் என்பது சத்தியம் சத்தியம் சத்தியம்.
வாழ்க வள்ளற் பெருமான் திருவடிகள்!
வாழ்க உயிர்இரக்கத்திருநெறி! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
