×

வரும் பிப். 20-க்குள் கோட்டூர்புரம் திட்டப்பகுதி திறக்கப்பட உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: வரும் பிப். 20-க்குள் திருக்கரங்களால் கோட்டூர்புரம் திட்டப்பகுதி திறக்கப்பட உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் , மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (30.1.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்; குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் கலைஞரால் குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கோட்டூர்புரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டது.

அப்போது கட்டப்பட்ட குடியிருப்பின் அளவு 216 ச.அடி அளவு ஆகும். அன்றைய தினம் தரை மற்றும் 2 தளங்களுடன் 1476 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இப்பொழுது நமது அரசு பொறுப்பேற்ற பிறகு 216 ச.அடி பரப்பளவில் மக்கள் வாழ்வது சிரமம் என்று கருதி நமது முதலமைச்சர் குறைந்தது 400 ச.அடி பரப்பளவில் குடியிருப்புகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் கட்டப்பட்டு வரும் அனைத்து குடியிருப்புகளும் 400 ச.அடி பரப்பளவிற்கு குறையாமல் கட்டப்பட்டு வருகின்றன. மறுகட்டுமான திட்டத்தின் கீழ் இங்கு இருந்த 1476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 1800 குடியிருப்புகள் தூண் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றது.

இத்திட்டப்பகுதியில் 90 % (சதவீத) பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 10 % (சதவீத) பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகின்ற 2026 பிப்ரவரி மாதம் 20- ம் தேதிக்குள் நமது முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு இங்கு இருந்த அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் குடியிருப்பு வழங்கப்படும். ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பயனாளிகளின் பங்கு தொகையை ரூ.1.50 இலட்சமாக குறைத்ததோடு மட்டுமல்லாமல் மாதத் தவணையில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் இன்னும் 5 நாட்களில் சென்னையில் 5 திட்டப்பகுதிகள், மற்ற மாவட்டங்களில் 11 திட்டப்பகுதிகள் மொத்தம் 16 திட்டப்பகுதிகளில் ரூ.1238 கோடி மதிப்பீட்டில் 9696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்க உள்ளார்கள்.

வாரியத்தால் சென்னையில் 1,36,946 குடியிருப்புகளும், மாவட்டங்களில் 96,836 குடியிருப்புகளும் மொத்தம் 489 திட்டப்பகுதிகளில் 2,33,782 குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால ஆட்சியில் 27628 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது. முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் இன்று வரை 55,039 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. கடந்த கால ஆட்சியில் 6417 குடியிருப்புகள் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த 5 வருடத்தில் 60,493 குடியிருப்புகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல் அடையார் மண்டல குழு தலைவர் ஆர்.துரைராஜ் தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர், மேற்பார்வை பொறியாளர் ஆர்.பிரமிளா, நிர்வாக பொறியாளர் விஜய்ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Koturpuram ,Minister ,Anbarasan ,Chennai ,Kothurpuram ,Minister Tha. Mo. Anbarasan ,Mo. Anbarasan ,Ma. Subramanian ,Tamil Nadu Urban Habitat Development Board ,Saitappettai ,Assembly Constituency ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது...