*கிலோ ரூ.15க்கு விற்பனை
போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் முள்ளங்கி அறுவடையை துவக்கி விவசாயிகள், கிலோ ரூ.15க்கு விற்பனையாவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், முள்ளங்கியை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
சரியான திட்டமிடல் இல்லாததால், அனைத்து தோட்டங்களிலும் ஒரே நேரத்தில் முள்ளங்கியை சாகுபடி செய்துள்ளதால், சந்தைக்கு வரத்து அதிகரித்தது. இதனால் முள்ளங்கியை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை.
விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் விட்டு வைத்தனர். மீன் குத்தகைதாரர்கள், விவசாயிகளிடம் பேசி முள்ளங்கியை கிலோ ரூ.1க்கு வாங்கிச்சென்று, ஏரிகளில் கொட்டி மீன்களுக்கு உணவாக அளித்தனர்.
இதனால், பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடியை கைவிட்டு, மாற்று பயிருக்கு மாறினர். இதன் காரணமாக, முள்ளங்கி சாகுபடி பரப்பு குறைந்தது. ஒரு சில விவசாயிகள் மட்டுமே மீண்டும் முள்ளங்கியை சாகுபடி செய்தனர்.
கடந்த சில வாரங்களாக முள்ளங்கி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்வதில் மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
