கோவை: கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: தவெக கூட்டணிக்கு டிடிவி தினகரன் வரவில்லை என்பதில் ஏமாற்றம் இல்லை. ஒவ்வொருவர் நிலை அப்படி இருக்கிறது. அவர் ஒரு நாளைக்கு ஒரு நிலையில் இருக்கிறார். எங்களோடு (தவெகவுடன்) வர வேண்டுமென நினைத்தார். சூழ்நிலைகள் அவருக்கு எப்படி ஏற்பட்டு இருக்கிறது என என்னால் சொல்ல இயலாது. எங்கு சென்றாலும் வாழ்க. டாக்டர் ராமதாஸ் தரப்பு தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக செய்தியில் பார்த்தேன். நல்லது நடக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தவெக மீதான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘‘இதற்கு முன்னால் எல்லோரும் விஜய் தங்கள் கூட்டணியில் இணைவார் என நினைத்தார்கள். நாமக்கல்லில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பெரிய கட்சியின் கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போடப்பட்டது என்ன சொன்னது எல்லாம் அவர்கள்தான். இன்று நிலைமை மாறும்போது, ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஐடி விங் ஆகியோர் தாக்குதல் நடத்துகின்றனர்’’ என்றார்.
தவெக கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவாரா என்ற கேள்விக்கு, ‘‘ஒவ்வொருவர் குறித்தும் நான் சொல்லி முடிக்கும் முன்பே, டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள். பிரச்னை எங்களுக்குத்தான் தெரியும். நான் சொல்லாமல் இருக்கும் வரை நல்லது’’ என்றார். அண்ணாவை அதிமுக மறந்துவிட்டது என விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘அதிமுக என் அண்ணாவை மறந்துவிட்டது. அதனால்தான் நான் வெளியில் வந்தேன். ஜெயலலிதா, அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களை போடாமல் ஒருவர் போட்டோவை மட்டும்போட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். யாரால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்துவிடக்கூடாது. எனது பாக்கெட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோ இருக்கிறது. இவர்கள்போல என்னால் மறக்க முடியாது. இதனை வைக்க தவெக இயக்கத்தில் ஜனநாயகம் இருக்கிறது’’ என்றார்.
