- உலக மகளிர் உச்சி மாநாடு
- விசேட கருத்திட்ட நடைமுறைத் திணைக்களம்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- நந்தம்பாக்கம் வர்த்தக மையம்
சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பணிகளில் நீடிப்பதற்கும், மீண்டும் பணிக்கு திரும்புவதற்கும் உதவும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த உலக மகளிர் உச்சி மாநாட்டில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக வங்கியின் மண்டல இயக்குநர் செம் மெட்டே, ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதியான காந்தா சிங், யுஎன்டிபியின் இந்தியப் பிரதிநிதி ஏஞ்சலா லுசிகி, மொரிஷியஸின் தலைமை கொறடா நவீனா ரம்யாத், தொழில்துறை, கல்வித்துறை, பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்காளர்கள், அடைகாப்பு மையங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உலக மகளிர் உச்சி மாநாட்டை இன்று (27.1.2026) நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையமத்தில் தொடங்கி வைக்கிறார்.
இன்றும், நாளையும் நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டில் 11 கருப்பொருள்களில் அமர்வுகள் நடைபெற உள்ளன. மேலும், இதில் 70க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பேச இருக்கின்றார்கள். இது குறித்த விவரங்கள் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் இணையதளத்தில் உள்ளன. இந்த விவாதங்கள், தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மாநில அளவிலான திட்டத் தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிறைவு விழாவில், பெண்கள் திறன் மேம்பாடு மற்றும் முறையான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஆதரவளிக்கும் மாநில அளவிலான பிரச்சாரம் ஒன்று தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
