ரூ.38 கோடி மதிப்பிலான 61 அதிநவீன புதிய பஸ்கள் இயக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ரூ.38 கோடி மதிப்பிலான 61 அதிநவீன புதிய பேருந்துகள் இயக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக சென்னை தீவுத்திடலில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ரூ.37.98 கோடி மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:
* இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது.
* படுக்கை வசதி அதிகரித்த இடம் மற்றும் இரண்டு படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.
* பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி அமைக்கப்பட்டுள்ளது.
* நடத்துநர் பயணிகளுக்கு தகவல்களை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது.
* பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகராம் அமைக்கப்பட்டுள்ளது.
* பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் நிறுவப்பட்டுள்ளது.
* இன்ஜின் தீயை முன்கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுப்பாட்டு அமைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், போக்குவரத்துத் துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் சுந்தரபாண்டியன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: