2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, தலா ரூ.3 ஆயிரம் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்: ரேஷன் கடைகளில் இன்று முதல் பெறலாம்

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி தொடங்கி வைக்கிறார். பொதுமக்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெற ரேஷன் கடைகளுக்கு வரும் கூட்ட நெரிசலை தவிர்க்க, வீடு வீடாக டோக்கன் விநியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டு வந்தது. டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெற உள்ள நிலையில் வரும் 9, 10, 11ம் தேதிகளில் ரேஷன் கடைகள் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை இன்று சென்னை, ஆலந்தூரில் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து பொதுமக்கள் இன்று காலை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கனில் தெரிவித்த நாள், நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலக மாந்தர் அனைவருக்கும் உயிர் வளர்க்கும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்திடும் வேளாண் தொழில் வளர்ச்சிக்கு உதவி வரும் கதிரவனுக்கும், உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கிடும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உழைப்பால் உணவளித்து பசிப்பிணி போக்குவதையே வாழ்வு எனக் கொண்டுள்ள உழவர் பெருங்குடி மக்களுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங்காலமாக கொண்டாடப்படும் பாரம்பரியமான உன்னத விழா இனிய பொங்கல் திருநாள் 15.1.2026 வியாழக்கிழமையன்று தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட திராவிட மாடல் அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கம் ரூ.3,000 சேர்த்து வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் இன்று காலை தொடங்கி வைக்கிறார்.

அதே நேரத்தில் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் பொங்கல் பொருட்களையும், ரொக்கப்பணம் ரூ.3 ஆயிரத்தை வழங்கி தொடங்கி வைக்கிறார்கள். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாயநிலை கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும் பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: