மும்பை: நடிகர்கள் அக்ஷய் கன்னாவைப் போல சினிமாவில் இருந்து நீண்ட இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும் என நடிகை நேகா தூபியா அறிவுரை வழங்கியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் கன்னா, கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 6 ஆண்டுகள் திரையுலகிலிருந்து முழுமையாக ஒதுங்கி இருந்தார். தனக்கு ஏற்ற கதைகள் அமையாததாலும், சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அவர் இந்த நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டில் ‘டிஷும்’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், அதனைத் தொடர்ந்து ‘இத்தேஃபாக்’ மற்றும் ‘த்ரிஷ்யம் 2’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துத் தனது திறமையை நிரூபித்தார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நேற்று ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை நேகா தூபியாவிடம், சினிமாவில் நிலவும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் சோர்வு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த நேகா, ‘நடிகர்கள் அக்ஷய் கன்னாவின் வழியைப் பின்பற்ற வேண்டும். அவரை போல 6 ஆண்டுகள் வீட்டில் சும்மா இருந்துவிட்டு, மீண்டும் பழைய கம்பீரத்துடனும் தரத்துடனும் திரும்புவது என்பது ஆக்கபூர்வமான விசயம். மேலும், தற்போதைய சோர்விலிருந்து விடுபட்டு மனநலம் மற்றும் தரத்தைப் பாதுகாக்க, அவரைப் போல நீண்ட ஓய்வு எடுப்பதே ஒரே வழி’ என்றும் அவர் யோச னை தெரிவித்துள்ளார்.
