- நம்பெருமாள் கைதல சேவை
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
- திருமங்கை மன்னன்
- திருச்சி
- ரப்பத்து உத்சவத்
- வைகுண்ட ஏகாதசி விழா
- நம்பெருமல்
- திருமங்கையாழ்வார்
- மன்னன்…
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் ராப்பத்து உற்சவத்தின் 7ம் நாளான இன்று மாலை நம்பெருமாள் கைத்தல சேவை நடைபெறுகிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சொர்க்க வாசலை கடந்தார். திருமங்கை மன்னன் வேடுபறி நாளை நடக்கிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது.
பகல் பத்து நாளில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல்(சொர்க்கவாசல்) திறப்பு கடந்த 30ம் தேதி நடந்தது. தொடர்ந்து ராப்பத்து உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. ராப்பத்து உற்சவத்தின் 7ம் நாளான இன்று மாலை நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெறுகிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சொர்க்க வாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெறுகிறது.
அதன்பின், உபயதாரர் மரியாதையுடன் பொது ஜனசேவை நடைபெறும். இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான நாளை(6ம் தேதி) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு வையாளி வகையறா கண்டருளுகிறார். இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார்.
அங்கு உபயதாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். நாளை சொர்க்கவாசல் திறக்கப்படாது. விழாவின் 10ம் திருநாளான 8ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். வரும் 9ம் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
