அகத்தியர் என்கிற ஞானகுரு!

கயிலாய மலையில் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. முப்பத்து முக்கோடி தேவர்களும், நந்தி தேவர், விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு என்று எல்லோரும் கயிலைக்கு சென்றனர். தேவலோக, பூலோகவாசிகள் அங்கு குழுமியிருந்தனர். இத்தனை பெருங்கூட்டத்தை தாங்காமல் வடதிசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது. பூமியின் பாரத்தை தாங்காது பூமாதேவி தவித்தாள். ஈசனும் நிலைமையை உணர்ந்தார். இவ்வளவு பேரின் பலத்தையும் ஒருங்கே பெற்றவர் அகத்திய முனிவர்தான். எனவே, அவர்தான் வடதிசையையும், தென் திசையும் சமமாக்குவார் என்று அகத்தியரை மகேசன் அருகே அழைத்தார்.

‘‘இந்தத் திருமணத்திற்கு எல்லோரும் வந்துள்ளதால் வடதிசை தாழ்ந்தும் தென் திசை உயர்ந்தும் உள்ளன. தாங்கள்தான் சென்று சமப்படுத்த வேண்டும்’’ என்று ஈசன் கேட்டுக் கொண்டார். ‘‘தாங்களின் தெய்வீகத் திருமணத்தை காணவேண்டும் என நான் இங்கு வந்துள்ளேன். ஆனால், தாங்களோ என்னை தென்திசை நோக்கி செல்லச் சொல்கிறீர்கள்’’ என்று கேட்டார்.‘‘அகத்தியரே நீங்கள் எங்கு நின்றாலும் அங்கு என் திருமண காட்சியை தரிசிக்கலாம்’’ என்று அருள்மொழி கூறினார். அப்படித்தான் அகத்தியர் பயணப்பட்டார். அகத்தியர் பயணப்பட்டது வெறும் பூமி சார்ந்த தளத்தை சரியாக்குவதற்காக அல்ல.

புராணங்கள் மிக மிக சூட்சுமமானவை. மேலோட்டமாக புரிந்து கொண்டால் எல்லாமே ஏதோ இஷ்டத்திற்கு சொல்லி வைத்திருப்பதாகத் தோன்றும். ஆனால், உள்ளுக்குள் ஒரு ஆன்மிக சாதகன் இறைவனை நோக்கி பயணப்படும்போது எந்த மாதிரியான இடையூறுகளை எதிர்கொள்வான் என்றும், அதை எவ்விதம் நீக்குவது என்பதைப் பற்றியும்தான் புராணங்கள் நிறைய பேசுகின்றன. வேதங்களாலும், உபநிஷத்துக்களாலும் விளக்க முடியாத விஷயங்களை புராணங்கள் கதை வடிவில் எளிமையாக விளக்கும்.

இங்கு சிவன், பார்வதி திருமணம், அதாவது தெய்வ திருமணம் என்பதே ஆத்ம சாட்சாத்காரம்தான். அதாவது ஞானம் அடைதல் என்கிற உயர்ந்த நிலையை குறிப்பதேயாகும். அப்போது அந்த வடதிசை எனும் ஞானபாகத்திற்கு சென்றவரை மீண்டும் தென்திசை எனும் அஞ்ஞான பாகத்திற்கு கொண்டு வருதல் வேண்டும். அதாவது இந்த பூலோகத்திற்கு கொண்டு வந்தால்தான் மக்களை கடைத்தேற செய்ய முடியும். அதற்காகவே அகத்தியர் தென்திசைக்கு வந்தார்.

இது எப்படியெனில், ஒரு ஞானி, தான் உடலல்ல ஆத்மாதான் என்று தெரிந்த பின்னும், மக்களுக்காக தான் உடலோடு இருப்பதாக ஒரு சாயலை காட்டுதல். அதற்குப் பிறகு அந்த ஞானி உபதேசங்களாலும், தமது அருளாலும் ஞானத்தை அளித்தல் எனும் காரியம் சாதாரணமாக நிகழும். அப்படிப்பட்ட ஞானபரம்பொருளோடு ஒன்றிவிட்ட ஞானியை உபதேச குருவாக மாற்றக்கூடிய சக்தியை பெற்றவர்தான் அகத்தியர்.

ஆன்மிக ஞான சாதனையில் மாபெரும் சக்தியின் பாய்ச்சல் தாளாமல் இருக்கும் நிலை வரும்போது அங்கு அகத்தியர் வருவார். இப்பேற்பட்ட சக்தியை இந்த உடல் தாங்கும் ரகசியத்தை சொல்லித் தருவார். ஞான மயமான ஞானியை உலகத்தாருக்கும் உதவச் செய்யும் மாபெரும் சக்தியாக விளங்குபவரே அகத்தியர். இந்த விஷயத்தை இவ்வளவுதான் விளக்க முடியும்.

கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)

 

Related Stories: