×

மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்துவைத்த தாய் கேரளாவில் மடக்கிப்பிடித்து இருவரும் கைது வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி, டிச.19: வந்தவாசி அருகே மகளை கடத்திச்சென்று கள்ளக்காதலனுக்கு அவரது தாய் திருமணம் செய்துவைத்துள்ளார். கேரளாவில் பதுங்கியிருந்த தாய், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து இளம்பெண்ணை மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சித்ரா (42). ஏழுமலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளார். 18 வயது இளைய மகள் மட்டும் சித்ராவுடன் உள்ளார். சித்ராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் ெதாழிலாளி கந்தன்(31) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் இருந்த தாய் சித்ரா மற்றும் தனது தங்கை மாயமானதாக கீழ்கொடுங்காலூர் போலீசில் மூத்த மகள் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சித்ராவின் செல்போன் எண்களை தொடர்ந்து ஆய்வு செய்ததில் அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து எஸ்ஐக்கள் வெங்கடேசன், புஷ்பாகரன் மற்றும் போலீசார் கேரளாவுக்கு சென்று அங்கு கண்காணித்து வந்தனர். அப்போது கேரளாவில் உள்ள ஒரு தேயிலைத்தோட்ட பகுதியில் தாய், மகள் மற்றும் கந்தன் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், இளம்பெண் தன்னை வாயில் துணியை வைத்து தாயுடன் சேர்ந்து கந்தன் கடத்தியதாகவும், பின்னர் அங்கு சென்று தனக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதற்கு தாய் சித்ராவும் உடந்தையாக இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆள் கடத்தல், கட்டாய திருமணம், பலாத்காரம், பெண்ணுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு மாற்றம் செய்து சித்ரா, கந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட இளம்பெண்ணை அவரது சகோதரியிடம் ஒப்படைத்தனர். கள்ளக்காதலனுக்கு தனது மகளை கடத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kerala ,Vandavasi ,Vandwasi ,Elumalai ,Vandwasi, Tiruvannamalai District ,
× RELATED 3 ஏக்கர் நிலத்துக்காக தலையணையால்...