திருவாரூர்,டிச.16: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.92,385 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 355 மனுக்களை அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகனசந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 10 பயனாளிகளுக்கும், மூன்று சக்கர சைக்கிள் 1 பயனாளிக்கும், மடக்கு சக்கர நாற்காலி 1 பயனாளிக்கும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.92 ஆயிரத்து 385 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், இலக்கிய திருவிழாவின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட பொதுநூலகத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட இரண்டு நிமிடம் பேச்சாற்றல், இலக்கிய வினாடி-வினா, உடனடி ஹைகூ, ஓவியபோட்டி, பொதுமொழியும் வட்டார வழக்குகளும் விவாத மேடை, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் முதல், மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும், சத்துணவுத் திட்டத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரம், வடக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையலராகப் பணிபுரிந்து பணியின் போது காலமான கவிதா என்பவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும் கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஸ்குமார், மாவட்ட நூலக அலுவலர் முத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
