சென்னை: வங்கதேசத்திலிருந்து, புற்றுநோய் சிகிச்சைக்காக, விமானத்தில், சென்னைக்கு வந்து கொண்டிருந்த, வங்கதேச பெண், விமானம் நடுவனில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து, தனியார் விமானம் நேற்று சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண்ணை, நுரையீரல் புற்றுநோய்க்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெறுவதற்காக அழைத்து வந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீரென மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். உடனடியாக விமான பணிப்பெண்கள், விமானிக்கு அவசரமாக தெரிவித்தனர்.
இதை அடுத்து விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், விமான நிலைய மருத்துவக் குழுவினர், தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி, பெண்ணை பரிசோதித்தனர். ஆனால் அந்தப் பெண், விமான இருக்கையில் சாய்ந்த படி, உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதை அடுத்து மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக,அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். சென்னை விமான நிலைய போலீஸ் விரைந்து வந்து, பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
