பாரீஸ் : தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ அமைப்பின் கலச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்திருப்பது இந்தியாவிற்கு பெருமை தரக் கூடிய தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை தனது பாரம்பரிய கலாச்சார (Intangible Heritage) பட்டியலில் சேர்த்தது UNESCO எனும் ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒன்றிய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள், மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் (UNESCO List of Intangible Cultural Heritage of Humanity) தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டிருப்பதால் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது.யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
