×

திருமண நாளன்று விபத்தில் படுகாயம் ஐசியூவில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்: கொச்சி ஆஸ்பத்திரியில் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: திருமண நாளன்று கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மணப்பெண்ணுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து வாலிபர் தாலி கட்டிய சம்பவம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தும்போளி பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆவணி என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை மேக்கப் செய்வதற்காக ஆவணி தன்னுடைய தோழிகள் 3 பேருடன் காரில் கோட்டயத்திற்கு சென்றார். மேக்கப் முடிந்து மண்டபத்திற்கு திரும்பி வரும் வழியில் கார் எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆவணி உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். மணப்பெண் ஆவணிக்கு கால் மற்றும் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து குறித்து அறிந்த மணமகன் ஷாரோன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆவணியை பார்த்த ஷாரோன் மிகுந்த வேதனையடைந்தார். ஆனாலும் மனம் தளராத அவர் குறிப்பிட்ட முகூர்த்தத்திலேயே ஆவணிக்கு தாலி கட்ட விரும்பினார். அதற்கு உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதுகுறித்து ஆவணிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் ஆலோசித்த போது அவர்களும் அதற்கு சம்மதித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் வைத்து குறிப்பிட்ட முகூர்த்தத்திலேயே ஆவணிக்கு ஷாரோன் தாலி கட்டினார். விபத்து குறித்து அறியாமல் இரு வீட்டினரின் உறவினர்களும், நண்பர்களும் மண்டபத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் எந்த குறையும் வைக்காமல் தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது.

Tags : Lainichi ,Kochi ,Thiruvananthapuram ,Sharon ,Thumboli ,Alappuzha ,Kerala ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...