தண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி பகுதியில் புனரமைக்கப்பட்ட பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் பூட்டியே கிடப்பதால், சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருகிறது. சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்துக்கு உட்பட்ட மண்ணடி பிரகாசம் சாலை - அண்ணா பிள்ளை தெரு சந்திப்பில் பழமைவாய்ந்த பூங்கா உள்ளது. மெட்ரோ ரயில் பணி காரணமாக மூடப்பட்ட இந்த பூங்கா, மெட்ரோ ரயில் பணி முடிந்து பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்ய முடியாமல் அவதிப்படுகிறார்கள்.