பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக 300 ரூபாயும் கோதுமைக்கு கூடுதலாக 400 ரூபாயும் வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீகாரில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடத்தப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “பீகார் மாநிலத்திற்கு பாஜக எதுவும் செய்யவில்லை.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இம்முறை பீகாரில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேரோடு பிடுங்கி எறியப்படும். நாங்கள் ஏற்கனவே பெண்களுக்காக அறிவித்த திட்டங்களை தாய்மார்களும் சகோதரிகளும் அதிக அளவில் வரவேற்றுள்ளனர். வரும் ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி பண்டிகை வர இருக்கிறது. இது மக்களுக்கு ஒரு புதிய ஆண்டு. பெண்களுக்காக நாங்கள் அறிவித்த திட்டத்தின் கீழ் மகர சங்கராந்தியின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30,000 வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த நிதியுதவி வழங்கப்படும். அந்த வகையில் இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் நமது பெண்கள் ரூ.1.5 லட்சம் நிதி உதவி பெறுவார்கள்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
