காரியாபட்டி, டிச.31: காரியாபட்டி வட்டாரத்தில் நெற்பயிர்களில் பனித்துளி அல்லது நீர்தவளைகள் படிந்து குலை நோய் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி வழங்கியுள்ள ஆலோசனைகள் வருமாறு:
தழைச்சத்து உரங்களான யூரியா, அமோனியம் குளோரைடு, டி.ஏ.பி அதிக அளவில் பயன்படுத்தினால் குலை நோய் ஏற்படும். குலை நோய் முதலில் கண் வடிவ புள்ளிகளாக தோன்றும். புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரம் பழுப்பு நிறமாகவும் இருக்கும். விரைவில் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலை முழுவதும் பரவி இலை கருகி விடும். தீவிர தாக்குதலுக்கு உள்ளான பயிர் தீப்பிடித்து கருகியது போன்று காணப்படும். கதிர் காம்பு பகுதியில் கருப்பு நிற புள்ளி தோன்றி அழுகி கதிர் குலை முறிந்து தொங்கும். நெல் மணி பதராகி விடும். குலை நோய் வரும்முன் தவிர்க்க சூடோமோனஸ் 0.2 சதம் கரைசலை ஒரு லிட்டருக்கு இரண்டு கிராம் அல்லது எக்டேருக்கு இரண்டரை கிலோ வீதம் நடவு செய்த 45-19 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். குலை நோய் தோன்றிய பின் தழைச்சத்து கொண்ட உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.