ஈரோடு,அக்.25: இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், எதிர்காலத்தில் உலக போர்கள் நடப்பதை தடுக்கும் நோக்குடன், ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. 1945ம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்தது. இதில் 196 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையானது அடிப்படைக் கல்வி,பசியில்லா உலகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண மிக முக்கியமான உலகளாவிய மையமாகவும்,உலகளாவிய ஒன்றுபட்ட வளர்ச்சியை உருவாக்குவதை அடிப்படையாகவும் கொண்டும் செயல்படுகிறது. உலக அமைதி,பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்த நிலையில் நேற்று ஐக்கிய நாடுகள் சபை தினத்தை முன்னிட்டு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் கந்தசாமி, ஐக்கிய நாடுகள் சபையின் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முகமது குதுரத்துல்லா,லோகநாதன் (வேளாண்மை), வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தகுமாரி, டிஎஸ்பி விவேகானந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
