காரைக்கால், டிச 26: திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 48 நாட்கள் நடைபெறும் விழாவை கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.டிசம்பர் 27ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் அரசின் முடிவிற்கு தடை விதிக்கக்கோரி நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வர பகவான் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில், சனிப்பெயர்ச்சி தினமான 27ம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாகவும், நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சனிப்பெயர்ச்சி தினத்தை தவிர்த்து மீதமுள்ள 48 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்த 48 நாட்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதி சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசனத்திற்கு ஒரு நாள் எத்தனை பேரை அனுமதிப்பார்கள் இந்த விவரங்கள் தெரிவிக்கப் படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி அனிதா சுமந்து, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.