சுசீந்திரம், டிச.26: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3ம் நாள் இரவு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்தநிலையில் 5ம் நாள் விழாவான நேற்று அதிகாலை கருட தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருள பஞ்சமூர்த்தி தரிசனம் நடந்தது.
அதனை தொடர்ந்து 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு கிழக்கு நோக்கி எழுந்தருளினார்கள். அப்போது வானத்தில் கருடன் சுவாமிகளை 2 முறை வலம் வந்தது. இந்த கருட தரிசன காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் ரத வீதியை சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது.