சென்னையில் காணாமல் போன 2 முதியவர்கள் காவல் கரங்கள் குழுவினரால் மீட்பு

சென்னை: சென்னையில் காணாமல் போன 2 முதியவர்கள் சென்னை காவல் கரங்கள் குழுவினரால் மீட்கப்பட்டு பரிதவித்த அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். சென்னை காவல்துறையில் 21.04.2021 அன்று ‘‘காவல் கரங்கள்‘‘ உதவி மையம், 9444717100 என்ற உதவி எண்ணுடன் (24 x 7) ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு “மனிதம் போற்றுவோம் மனித நேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சேவையாற்றி வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) அவர்கள் கண்காணிப்பில், நவீன காவல் கட்டுப்பாட்டறை, காவல் கரங்கள் உதவி மையம் மூலம் பெறப்படும் அழைப்புகள் வீடற்ற, ஆதரவற்ற நபர்களுக்கு உதவிட வேண்டி காவல்துறையுடன் தன்னார்வலர்கள் உதவியுடன் உடனடி உதவியும், காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அழைப்பின்பேரில், அவ்விடத்திற்கு உடனடியாக சென்று ஆதரவற்றவர்களை மீட்டு, உரிய மருத்துவ மற்றும் தங்கும் வசதி இருப்பிடங்கள் வசதிகளுள்ள அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பு இல்லங்களில் தன்னார்வலர்களின் மூலம் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் தொடர்ச்சியாக உதவி செய்து ஆதரவற்ற நபர்களின் உறவினர்ளை கண்டறிந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்படுகிறது.

ஆதரவற்றவர்களை மேற்குறிப்பிட்ட இல்லங்களில் சேர்த்து நல்ல முறையில் பேணி பராமரித்தும் உதவி செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 13.09.2025 அன்று காவல் கரங்கள் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து தேனாம்பேட்டை சிக்னல் அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவரை, மீட்டு அவருக்கு தேவையான உதவிகள் செய்து, விசாரணை செய்ததில், அவரது பெயர் ஆறுமுகம், வ/70, என்பதும், வீட்டை விட்டு, ஞாபக மறதியால் மீண்டும் வீடு செல்ல இயலாமல் பல இடங்களில் சுற்றி திரிந்தது தெரியவந்ததின்பேரில், E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய நமூனா மூலம் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, முதியோர் காப்பகத்தில் தங்க வைத்து, அவரது புகைப்படத்தை வலைதள வசதிகள் மூலமாக வைத்து விசாரணை செய்ததில், இவர் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், 29.08.2025 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணாமல் போனதால், அவரது வீட்டார் K-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், 30.08.2025 அன்று ஆண் காணவில்லை பிரிவில் வழக்கு பதிவு செய்து தேடி வருவதும் தெரியவந்தது.

மேற்படி காவல் நிலையம் மூலம் இவரது குடும்ப விவரங்கள் பெறப்பட்டு, அவரது மகன் ரமேஷ் என்பவரை நேற்று (15.05.2025), காவல் கரங்கள் சேவை மையம் மூலம் முதியவர் ஆறுமுகம் அவரது மகன் ரமேஷ் என்பவரிடம் முறையே ஒப்படைக்கப்பட்டு,குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டார். இதே போல, இன்று (16.09.2025) காலை, காவல் கரங்கள் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் கரங்கள் குழுவினர் தன்னார்வலர் உதவியுடன், புரசைவாக்கம், நோபல் மருத்துவமனை அருகில் ஆதரவற்ற நிலையில் இருந்த 80 வயது மூதாட்டியை மீட்டு, மூதாட்டி, சரிவர வாய் பேச முடியாமல் இருந்ததும், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மறதியால் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்ததும் தெரியவந்தது.

பின்னர் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, அனுசரணையுடன் கவனித்து, அவரது புகைப்படம் காவல் கரங்கள் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணை செய்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட மூதாட்டியின் பெயர் லோகநாயகி, பெ/வ.80, ஐ.சி.எப்., சென்னை என்பதும், இவர் காணாமல் போனதால், இவரது வீட்டார் K-7 ஐ.சி.எப். காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், 11.09.2025 அன்று பெண் காணவில்லை பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவரை தேடி வருவதும் தெரியவந்தது. அதன்பேரில், மூதாட்டி லோகநாயகியின் மகன் சோலிங்கம் என்பவருக்கு தகவல் கொடுத்து, இன்று காவல் கரங்கள் உதவி மையம் மூலம் அதிகாரிகள் முன்னிலையில், மீட்கப்பட்ட மூதாட்டி லோகநாயகி பரிதவித்த அவரது மகன் சோலிங்கம் என்பவரிடம் மீள சேர்த்து வைக்கப்பட்டார்.

மேற்கண்ட மூத்த குடிமக்களின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் சென்னை பெருநகர காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். நடப்பு 2025ம் ஆண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 725 நபர்கள் மீட்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு விவரங்கள் சேகரித்து, அதில் 127 நபர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை காவல் கரங்கள் சேவை மையம் மூலம் 2021ம் ஆண்டு காணாமல் போன முதல் 1,419 நபர்கள் காணாமல் தவித்த அவர்தம் குடும்பத்துடன் மீள சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற உதவிகள் கோரும் நிலையில் கண்டறியப்படும நபர்களுக்கு உதவிட காவல் கரங்கள் உதவி மையம் அழைப்பு எண். 9444717100 என்ற எண்ணை அழைத்திட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: