புளியங்குடி, டிச. 17: புளியங்குடியில் எலுமிச்சை வியாபாரிகளின் குறைகளை திமுக விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ்.விஜயன் கேட்டறிந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக மாநில விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ்.விஜயன், பல்வேறு தரப்பினர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். புளியங்குடியில் உள்ள எலுமிச்சை மார்க்கெட்டில் எலுமிச்சை விவசாயிகளிடமும் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். புளியங்குடி எலுமிச்சை விவசாய சங்க பொருளாளர் முத்துப்பாண்டி அனைவரையும் வரவேற்று கோரிக்கைகளை எடுத்துரைத்தார். வயல்களில் புதிய போர் போடுவதற்கு மானியம் தர வேண்டும். சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மானியம் மூலம் ஏற்பாடு செய்து தர வேண்டும். புளியங்குடியில் எலுமிச்சை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.