சென்னை: கடலூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் மதில்சுவர் சாய்ந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம், குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மதில்சுவர் சாய்ந்ததில் சம்பவ இடத்தில் பணிபுரிந்துவந்த பூதங்கட்டி கம்பளிமேடு பகுதியைச் சேர்ந்த இளமதி (35) மற்றும் இந்திரா (32) ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
‘‘துயரகரமான இச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என கூறியுள்ளார்.
