சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘தி ஒயிட் பலூன்’ எனும் ஈரானிய மொழிப்பெயர்ப்பு திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு மாதம் ‘தி ஒயிட் பலூன்’ எனும் ஈரானிய மொழிப்பெயர்ப்பு திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனிதநேயம் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க
வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
