* தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்காக நேர்மையான முறையில் பட்டியல் தயாரிக்க வலியுறுத்தல்
சென்னை: சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்கு திருட்டு மற்றும் சிறப்பு தீவிர திருத்தம்’ நடவடிக்கைகளுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் முதல்வர் விவாதித்தார். மேலும் தமிழகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஓரணியில் தமிழ்நாடு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஓரணியில் தமிழ்நாடு குறித்தும், அதன் மூலம் திமுகவில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா பவர் பாய்ண்ட் மூலம் விளக்கினார். அதை தொடர்ந்து, எஸ்ஐஆர் குறித்தும், வாக்கு திருட்டு குறித்தும் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ பவர் பாய்ண்ட் மூலம் விளக்கி கூறினார். கூட்டத்தின் போது, தேர்தல் பணிகள், பிரசார வியூகம் குறித்தும் முக்கிய நிர்வாகிகளுடன் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு: சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்கு திருட்டு மற்றும் சிறப்பு தீவிர திருத்தம்’ நடவடிக்கைகளுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அதாவது, தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில், அந்த வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்ச நீதிமன்றமே “Mass deletion” இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
குடிமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்தும், அகில இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு தேர்தல் களத்தில் பாஜவின் ‘வாக்குத் திருட்டை’ எதிர்த்தும் தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்களை தடுத்து நிறுத்திய, அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆணவப் போக்கை கடைபிடிக்கும் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்தும், ஒன்றிய பாஜ அரசும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளை எதிர்த்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தலை நடத்துவது மட்டுமல்ல, அதற்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதும் தன்னாட்சி பெற்ற அமைப்பிடம் இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்திலேயே தேர்தல் ஆணையத்திற்கு முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வு குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலை தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு ஒன்றிய பாஜ அரசுடன் கைகோத்து நிற்பதும், பாஜவின் தில்லுமுல்லுகளுக்கு துணை போவதும் ஜனநாயகத்தைக் கேள்விக்குரியதாக ஆக்குவதோடு கேலிக்குரியதாகவும் மாற்றி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்து ஜனநாயகத்தின் பாதுகாவலராக திகழும் திமுக தலைவரின் ஆணைக்கிணங்க, திமுக 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 17ம்தேதி அன்றே இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து “இறந்த வாக்காளர்களை நீக்குதல்” “BLO-க்கள் மற்றும் BLA-க்களுடன் ஒருங்கிணைப்பு” “பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் தொகுப்புக் கையேடுகளை வழங்குதல்” “அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல்”, “ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வசிப்பிட இடம் மற்றும் பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களாக ஆக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட மிக முக்கியமான 5 கோரிக்கைகளை முன்வைத்து விரிவான மனு ஒன்றை அளித்துள்ளது.
இதை இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்யும் வேளையில், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளை தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளைப்படி, ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து, உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
இந்திய தேர்தல் களத்தில் அசாதாரண மற்றும் ஆபத்தான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், திமுக தலைவரின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கையான ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கம், மக்கள் இயக்கமாக மாறி இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் முழக்கமாக மாறியிருப்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மன மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விரும்புகிறது. முற்போக்கு திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்வரின் தலைமைக்கு பள்ளி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒரு புறமும்,
பள்ளி மாணவிகள் முதல் இல்லத்தரசிகள் வரை இன்னொரு புறமும் முழுமையான ஆதரவுக் கரம் நீட்டுவதால், மாணவர், இளைஞர், பெண்கள், முதியோர் என அத்தனை தரப்பு மக்களின் அன்பையும் பெற்றுத் திகழ்கிறார். திமுகவில் குவிந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை, இப்போது மட்டுமல்ல வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும், ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் திமுகவே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதோடு மட்டுமல்ல, மதவெறி சக்திகளுக்கும், அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளது.
இத்தகைய சாதனைக்கு திட்டமிட்டதுடன், ஒவ்வொரு நாளும் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் நிலவரத்தைக் கேட்டறிந்து ஊக்கப்படுத்தி, ஆலோசனை வழங்கும் நம் தலைவரின் ஆணைக்கிணங்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து, உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள், வீடுவீடாகச் சென்ற திமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்பு செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
* பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கை.
* வாக்காளர் பட்டியலை தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு ஒன்றிய பாஜ அரசுடன் கைகோர்த்து நிற்பதும், பாஜவின் தில்லுமுல்லுகளுக்கு துணை போவதும் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
