2 பேர் பலி: 2 பேர் படுகாயம்

திருமங்கலம்/ வாடிப்பட்டி, ஏப். 11: மதுரை நெடுமதுரையை சேர்ந்தவர்கள் அழகு (47), மொக்கையன். இருவரும் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட நெடுமதுரையிலிருந்து டூவிலரில் சென்றனர். திருமங்கலம்- உத்தங்குடி செல்லும் ரிங்ரோட்டில் நிலையூர் செல்லும் ரோட்டிற்கு சென்ற போது திருமங்கலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் இவர்கள் சென்ற டூவிலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அழகு உயிரிழந்தார். மொக்கையன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அழகு மனைவி பெரிய அழகி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிந்து கார் டிரைவர் சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த ஷேக்தாவூத்தினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*மதுரை கூத்தியார்குண்டு பாரபத்தியை சேர்ந்தவர் சோனை பாண்டி வயது(25). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு டூவீலரில் அலங்காநல்லூர் சென்று விட்டு கூத்தியார்குண்டு செல்ல தனிச்சியம் பிரிவுக்கு வந்தார். அப்போது திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக இவரது டூவீலர் மீது மோதி இழுத்து சென்றது. அதன்பின் பஸ் டிரைவர் பேருந்தை பின்புறமாக எடுத்தபோது அங்கு நின்று கொண்டிருந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த ரவி வயது (28) என்பவர் மீது மோதியதில் ரவிக்கு காயம் ஏற்பட்டது. இதில் முதலில் பஸ்சில் சிக்கிய சோனைபாண்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த ராமசுப்பிரமணி (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post 2 பேர் பலி: 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: