×

ரூ.10 கோடி சொத்துக்காக சிறுவனை அடைத்து வைத்து மூதாட்டி சித்ரவதை: வீட்டின் பூட்டை உடைத்து மீட்ட போலீசார்

காங்கயம்: காங்கயம் அருகே சொத்துக்காக வளர்ப்பு மகனான 15 வயது சிறுவனை வீட்டில் அடைத்து வைத்து மூதாட்டி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் சிறுவனை அதிரடியாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். காங்கயம் அருகே நத்தக்காடையூரை சேர்ந்தவர் நாச்சியப்பகவுண்டர் (65). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 10 ஆண்டுக்கு முன் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஹரிஷ் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். தற்போது சிறுவனுக்கு 15 வயது ஆன நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நாச்சியப்பகவுண்டர் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அவருக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் நிலம், மற்றும் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. அவரது சொத்துகள் வாரிசான வளர்ப்பு மகன் ஹரிஷ் பெயருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதை விரும்பாத லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள், சிறுவனை மன ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிறுவனை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, உணவு ஏதும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். தினமும் அரை டம்ளர் தண்ணீர் மட்டும் கொடுத்தும், இயற்கை உபாதைகள் கழிக்க கை, கால்களை கட்டி கழிவறைக்கு கூட்டி சென்றுள்ளனர். தன்னை வெளியே விட கூறியதால், சிறுவனை லட்சுமி அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா, காங்கயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது பண்ணை வீட்டில் சிறுவனை அடைத்து சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் பூட்டை உடைத்து சிறுவனை அதிரடியாக மீட்டனர். தொடர்ந்து அரசு காப்பகத்தில் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனை துன்புறுத்திய வளர்ப்பு தாய், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.10 கோடி சொத்துக்காக சிறுவனை அடைத்து வைத்து மூதாட்டி சித்ரவதை: வீட்டின் பூட்டை உடைத்து மீட்ட போலீசார் appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Nattakkadaiyur ,Gangaim ,Dinakaran ,
× RELATED ஓட்டல் கழிவுகளை கொட்ட வந்த கார் சிறைபிடிப்பு