திருவொற்றியூர்: சென்னையில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் எண்ணூர் விரைவு சாலை வழியாக மணலி சாலையை கடந்து மாதவரம், மணலி, புதுநகர், மீஞ்சூர் போன்ற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்து, கன்டெய்னர் லாரி, கார், பைக் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மணலி சாலையில் எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து எம்எப்எல் சந்திப்பு வரை சாலையின் நடுவே அமைத்துள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இந்த மின்விளக்குகளை திருவொற்றியூர் மண்டல மின்சார பிரிவு அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக இந்த மின்விளக்குகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யவில்லை. இதனால் கனரக வாகனங்கள் வேகமாக செல்லும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.