பொன்னேரி அருகே நண்பனாக பழகி கஞ்சா சாக்லெட் கொடுத்து பள்ளி மாணவி பலாத்காரம்

* வாலிபருக்கு தர்மஅடி

* உறவினர்கள் 4 பேர் கைது

சென்னை, பிப். 14: மீஞ்சூர் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில், பிளஸ் ஒன் மாணவியை கடத்தி கஞ்சா சாக்லெட் கொடுத்து பலாத்காரம் செய்த வாலிபரை உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  மீஞ்சூர் ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. அதே பகுதியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரது மகன் பரத் (22) என்பவருடன் மாணவி நட்பாக பழகி வந்துள்ளார்.கடந்த 10ம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பரத், ‘உன்னை இயற்கை காட்சிகள் நிறைந்த ஒரு இடத்துக்கு அழைத்து செல்கிறேன். கண்டிப்பாக உனக்கு பிடிக்கும்’ என்று ஆசை வார்த்தை கூறி பைக்கில் ஏற்றிக்கொண்டு ரெட்டிப்பாளையம் பகுதியில்  உள்ள தைலமர தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர், மாணவிக்கு தெரியாமல் பரத் சாக்லெட்டில் கஞ்சா கலந்து கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்ட மாணவி சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார். இதன் பின்னர் பரத்தும் கஞ்சா கலந்த  சாக்லெட்டை சாப்பிட்டுவிட்டு மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து 2 மணி நேரம் கழித்து பரத் மயக்கம் தெளிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே பள்ளிக்கு சென்ற மகள் இரவு வரை வீட்டுக்கு வராததால் பெற்றோர் மாணவியின் நண்பர்களிடம் விசாரித்தபோது  பரத்துடன் பைக்கில் சென்றதை பார்த்ததாக கூறியுள்ளனர்.இதையடுத்து பரத்தை பிடித்து விசாரித்தபோது உண்மையை கூறியுள்ளார். உடனே பரத்தை அழைத்துக்கொண்டு தைலமர தோப்பிற்கு சென்றபோது மாணவி ஆடைகள் இல்லாத நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்து  ஆத்திரமடைந்த அவர்கள் பரத்தை சரமாரியாக தாக்கிவிட்டு மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.தகவலறிந்து பரத்தின் உறவினர்கள் வந்து அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பரத் தரப்பு கொடுத்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து பரத்தை தாக்கிய மாணவியின்  உறவினர்கள் 4 பேரை கைது செய்தனர். மாணவியின் பெற்றோர் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் பரத் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: