எலிகளை கொல்ல வைத்த விஷம் கலந்த பருப்பை தின்ற 15 ஆடுகள் சாவு 20 ஆடுகளின் உயிர் ஊசல்

விருதுநகர், பிப். 12: எலி, பாம்புகளை கொல்ல விஷம் கலந்து வைக்கப்பட்ட பருப்பை தின்ற 15 செம்மறி ஆடுகள் இறந்தன. மேலும் 20 ஆடுகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விருதுநகர் ரோசல்பட்டியில் தனியார் பருப்பு மில் உள்ளது. இங்கு பாம்பு, எலிகளை கொல்லை பருப்பு மற்றும் தவிடில் குருணை மருந்து கலந்து வைக்கப்பட்டது. பின் இவைகளை அகற்றி அருகிலுள்ள கண்மாயில் கொட்டுப்பட்டு வந்துள்ளன. கண்மாயில் கொட்டப்பட்ட கழிவுகளை இதே பகுதியை சேர்ந்த கருப்பசாமிக்கு சொந்தமான ஆடுகள் இன்று தின்றுள்ளன. தின்ற சிறிது நேரத்தில் 15 ஆடுகள் அடுத்தடுத்து இறந்து மடிந்தன. மேலும் 20 ஆடுகளின் நிலைமை மோசமாக உள்ளது.

இதுகுறித்து ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று கடந்த வாரம் திருப்பதி, சின்னதம்பி ஆகியோரது 13 வெள்ளாடுகள் இறந்தன. இதுகுறித்து போலீசில் சின்னத்தம்பி, திருப்பதி புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் இதுபோன்ற சம்பவம் தொடர்கிறது.

இந்த கண்மாய் குடிநீர் ஆதாரமாகவும் இருப்பதால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: