சாலையில் திரிந்த சிறுமி மீட்பு

சென்னை: செங்கல்பட்டு அழகேசன் நகர், அண்ணா சாலை பகுதியில் நேற்று காலை சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுமி அழுதபடி திரிந்து கொண்டிருந்தாள். இதை பார்த்த பொதுமக்கள் சிறுமியை அழைத்து விசாரித்தபோது, விவரம் சொல்ல தெரியாமல் திணறியது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து பெண் காவலர்கள் குழந்தைக்கு பால், பிஸ்கெட் கொடுத்து பெயர், விவரம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி தனது பெயர் சுவேதா என்று மட்டும் கூறியுள்ளார். ஆனால் தாய், தந்தை யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.

இதையடுத்து, போலீசார் செங்கல்பட்டு அரசு குழந்தை நலக்காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சிறுமி சுவேதாவை மீட்டுச் சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்று பொதுமக்கள் ஆதரவற்ற குழந்தைகளை பார்த்து எங்களுக்கு தகவல் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பவ இடத்துக்கு அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து விடுவோம். குழந்தையை மீட்டு செல்ல யாரும் வரவில்லை என்றால் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோம். அப்படியும் வராவிட்டால் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.

Related Stories: