தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில் தமிழக அரசின் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் சுமார் 15 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு சுமார் 80 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த மையத்தின் அருகிலேயே ஈம சடங்கு காரியம் நடத்தும் கூடம் மற்றும் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்ளது. இங்கு இரவு பாடசாலை நடத்தப்படுகிறது. இந்த 3 கட்டிடமும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த 5 மாதங்களாக இந்த 3 கட்டிடத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்கள், பாடம் நடத்தும் ஆசிரியைகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இருள் சூழ்ந்து காணப்படுவதால், குழந்தைகளுக்கான பாடம் நடத்த முடியாமலும், இரவு பாடசாலை நடத்த முடியாமலும் தவிக்கின்றனர் என்ற செய்தி நேற்றைய தினகரனில் வெளியானது. இதன் எதிரொலியாக, நேற்று காலை மாநகராட்சி மண்டல அதிகாரிகள், மேற்கண்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், மின்வாரிய அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மேற்கண்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.