பெரம்பூர்: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், பெண் நோயாளிக்கு பழுதடைந்த சுவாச கருவி பொருத்தியதால் சிகிச்சையை பெற முடியாமல் பரிதாபமாக பலியானார். ராயபுரத்தை சேர்ந்தவர் குமாரி (50). நேற்று முன்தினம் குமாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் உறவினர்கள் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கிட்னியில் பாதிப்பு இருப்பது தெரிந்தது. எனவே அவருக்கு உடனடியாக சுவாச பிரச்னைக்காக, வென்டிலேட்டர் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதனை பணியில் இருந்த டாக்டர் அலெக்சாண்டர் கண்டித்துள்ளார். எனவே, அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் குமாரி இறந்துவிட்டார்.