சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பால் இந்த ஆண்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெங்கு பாதிப்பு தொடர்பாகவும் அதை தடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆய்வு ஒன்றை நடத்த மாநகராட்சி பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்கள் எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளவும் டெங்கு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆய்வு ஒன்று நடத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 17 லட்சம் வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக சென்று இந்த ஆய்வை நடத்தவுள்ளனர்.