சென்னை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பேரிடர் பாதிப்பில் இருந்து தெற்கு ரயில்வே படிப்படியாக மீண்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் 93% எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்க தொடங்கி விட்டன. 306 பயணிகள் ரயில்களில் 121 மீண்டும் இயக்கப்படுகிறது. சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கவும் தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியன் ரயில்வே 2023ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்மயமாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்தவகையில் பொள்ளாச்சி-போத்தனூர், மதுரை-மானாமதுரை உள்பட தெற்கு ரயில்வேயில் 352 கி.மீ வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், 112 கி.மீ வழித்தடங்கள் மின்மயமாக்கும் பணிகள் விரைவில் முடிவடையும்.