2017-18ம் ஆண்டிற்கான நிலுவை தொகை ரூ.4321 கோடியை கேட்டு பரிந்துரை செய்யப்படும்: அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: 2017-18ம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி வரி நிலுவை தொகை ரூ.4,321 கோடியை தமிழகத்துக்கு தர வேண்டும் என்று அமைச்சர்கள் குழு கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு 2017-18ம் ஆண்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு ரூ.4,321 கோடி என கடந்த செப்.22ம் தேதி  அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதில், அமைச்சர்கள் குழு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு பரிந்துரைகள் செய்வதற்கு முன்னர் மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகையினை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று பீகார் துணை முதல்வர் சுசில் குமார் மோடி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார், வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ஆணையர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தற்போது நிலுவையிலுள்ள தொகை குறித்த கணக்கீடுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்கிட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர்கள் குழுவிடம் வலியுறுத்தினார். அப்போது அமைச்சர்கள் குழு, மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டிய இறுதி தொகையினை ஆராய்ந்து, வரும் 5ம் தேதி நடைபெற உள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் பரிசீலனை செய்திட பரிந்துரை செய்யப்படும் என்று கூறினர். இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படவேண்டிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: