சென்னை: வாடகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 6 நாட்களாக நடந்து வந்த கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.அதிக அபராதம் விதிக்கப்படுவதால், அதிக பாரம் ஏற்ற மாட்டோம்; கன்டெய்னர் லாரிகளுக்கு உரிய வாடகை நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறி, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 16ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 21 சங்கங்கள் பங்கேற்றன.தற்போது,20 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ₹2,500 வாடகையை 3,800 ஆகவும் 40 அடி கன்டெய்னருக்கு வழங்கப்படும் ₹3,500ஐ 4,800 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். காலி கன்டெய்னர் லாரிகளுக்கு வழங்கப்படும் 2,000 வாடகையை, 3,300 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இதை நிறைவேற்றினால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கன்டெய்னர்கள் தேங்கியதால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிப்புக்குள்ளானது. அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறக்கோரி, தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுடன் நேற்று மதியம் பேச்சுவார்த்தை நடந்தது.