சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரியில் உயர் மின்அழுத்தம் காரணமாக தீவிபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெரினா காமராஜர் சாலையில் ராணிமேரி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் பொன்விழா கலையரங்க கட்டிடத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தில் லதா எலக்ட்ரானிக்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் வளாகம் முழுவதும் மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த பெட்டியில் உயர் மின்அழுத்தம் காரணமாக திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.