சென்னை: தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் விவரங்களை டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு புகைப்படம் எடுத்து அனுப்பும் பணி முடிவடைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டத்தை சேரந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர், எங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்துள்ளது. விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கடையை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். இதேபோல், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் எத்தனை என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.