சென்னை: ஓராண்டு ஆகியும் மருந்தாளுநர் காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் இருக்கும் நிர்வாகத்தை கண்டித்து மருந்தாளுநர்கள் சான்றிதழ்களை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 1,300க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பிரிவில் தலா ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 10 சதவீத மருத்துவமனைகளில் தான் முழுமையான பணியாளர்கள் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி அரசு மருத்துவமனைகளில் 440 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தேச பெயர் பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இதையடுத்து 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு மார்ச் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.