சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லைக்கு 377 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தர வேண்டும். குறிப்பாக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். முதல் தவணை காலகட்டத்தில் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு 8 டிஎம்சிக்கு 1.6 டிஎம்சி மட்டுமே தந்தது. இந்த நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டாவது தவணைக்காலம் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் 4 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீர் தர வேண்டும் என்று கடிதம் மூலமாகவும், தொலைப்பேசி வாயிலாகவும் தமிழக பொதுப்பணித்துறை வலியுறுத்தியது. ஆனால், ஆந்திர அரசு பதில் அளிக்காமல் மவுனம் காத்தது. இந்த நிலையில், கடந்த 5ம் தேதி பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஆந்திரா நீர்வளத்துறை தலைமை பொறியாளரை சந்தித்து பேசினார். அப்போது 4 டிஎம்சி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.