பெருங்குடி குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால் சிக்கின தலை, உடலை தேடி அலையும் போலீஸ்: கொலையானது துணை நடிகையா? கம்ப்யூட்டர் இன்ஜினியரா?

சென்னை: சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இளம் பெண்ணின் ஒரு கை, 2 கால்கள் மட்டுமே சிக்கின. இதனால், உடல் மற்றும் தலையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் துணை நடிகையா? கம்ப்யூட்டர் இன்ஜினியரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெருங்குடியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் உள்ள பொருட்களை சில பெண்கள் மற்றும் இளைஞர்கள் பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பது வழக்கம். அதேபோல, நேற்று முன்தினம் மாலையில், அங்கு சில பெண்கள் குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தனர்.

அப்போது, குப்பையை கிளறியபோது, ஒரு பை கிடந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது, 2 கால்கள், ஒரு கை இருந்தது. கையில் ஒரு தங்க வளையலும் இருந்தது. ஆனால் உடலை மட்டும் காணவில்லை. இது குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இணை கமிஷனர் மகேஸ்வரி, மவுன்ட் துணை கமிஷனர் முத்துச்சாமி, உதவி கமிஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இளம்பெண்ணின் பாகங்கள் கிடந்த குப்பை பகுதி வள்ளுவர்கோட்டத்தில் உள்ள குப்பை சேகரிக்கும் குடோனில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்தபோது, 10வது மண்டலத்தில் உள்ள கோடம்பாக்கம், அசோக்நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் குப்பைகள், வள்ளுவர்கோட்டம் குப்பை சேகரிக்கும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பெருங்குடிக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதனால் 10வது மண்டலத்தில் உள்ள பகுதிகளில் பெண்கள் யாராவது காணாமல் போயுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயதிருக்கலாம். அவரது வலது கையில் 2 இடங்களில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டுள்ளது. கால்களில் மெட்டி இருக்கிறது. வசதியான வீட்டு பெண் போல தெரிகிறது. அவர் யார்? எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும், உடல் பாகம் எங்கே என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் கையில் பச்சை குத்தியுள்ளதால், அவர் நடிகையாக இருக்கலாம் அல்லது வெளிமாநில பெண்கள் அதிகமாக சென்னையில் வசிக்கின்றனர். அவர்களில் யாராவது இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பெண்ணை கொலை செய்து, கை, கால்களை மட்டும் தனியாக வெட்டியதை வைத்துப் பார்க்கும்போது, வெட்டுவதில் கை தேர்ந்தவர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், இது கறி வெட்டுகிறவர்கள் அல்லது டாக்டர்கள் யாராவது கூட இதை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவரை 30 வயது மதிக்கத் தக்க பெண் என்றும், பச்சை குத்திய தகவலும் வெளியான பின்னரும் இதுவரை புகார் வராததால், காதலித்து சென்னைக்கு ஓடி வந்தவர்கள் அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியராக கூட இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: